கொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக்
கோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார்சீ
ரண்டர்பிரா னடியவருக் கடியா ராகு
மாதரவா லணுக்கவன் றொண்டர்க் காளாய்
மண்டொழுமெண் டருசித்தி வாய்த்து ளார்தாம்
வன்றொண்டர் வடகயிலை மருவு நாண்மு
னெண்டிகழு மறைமூல நெறியூ டேகி
யிலங்கொளிசேர் வடகயிலை யெய்தி னாரே.
மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.
இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; “சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்” என்று நினைந்து, “இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்” என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.
07/27/2011 at 5:59 pm |
i like it so much